இமயமலையை சுற்றி ஒரு பௌர்ணமி கிரிவலம் செல்லலாம் என்று நான் சொன்னால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? உங்கள் mind voiceஐ நான் catch பண்ணி விட்டேன்.
ஆனால் இது உங்களால் முடியும் என்கிறேன்.
எப்படி? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
அதற்க்கு முன் ஒரு கதை சொல்கிறேன்.
பள்ளி பருவத்தில் எல்லோரும் படித்த கதை தான். ஆனாலும் பலரும் மறந்திருப்போம்.
ஒரு அரசன் பெரும் பொருள் செலவில் சிவனுக்கு கோவில் கட்ட நினைக்கிறான். அதற்காக பல்வேறு வல்லுனர்களை எல்லாம் கலந்து ஆலோசித்து கோவில் கட்ட ஆரம்பிக்கிறான்.
அதே சமயத்தில் ஒரு ஏழை சிவ பக்தர் தன் மனதிலேயே சிவனுக்கு கோயில் கட்டுகிறார்.
இருவருமே ஒரே சமயத்தில், சிவனுக்கு கோவில் கட்டி, ஒரே நாளில் கும்பாபிஷேகத்தை செய்ய முடிவெடுக்கிறார்கள்.
கும்பாபிஷேகத்திற்கு, முந்தைய நாள் இரவில் அரசனின் கனவில் சிவன் அசரீரியாக சொல்கிறார், “மன்னனே, உன் கும்பாபிசேகத்தை வேறு ஒரு நாளில் நீ வைத்துக்கொள். என் பக்தன் ஒருவன் அவன் மனதிலேயே எனக்கு கோவில் கட்டி நாளை கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்திருக்கிறான். நான் நாளை அங்கே செல்ல இருக்கிறேன்.” என்று.
இப்போது நீங்கள் கேட்கலாம், ஒரே சமயத்தில் இறைவனால் இந்த இரண்டு இடங்களுக்கும் செல்ல முடியாதா? என்று.
பெரும் பொருள் செலவு செய்வது பெரிய விஷயம் அல்ல. மனத்தால் இறைவனை எந்த அளவுக்கு நினைக்கிறோம் என்பது தான் முக்கியம். அரசனை விட அந்த சிவ பக்தரின் பக்தி தான் சிறந்தது. அதனால் தான் அவரின் மன கோவிலுக்கு சிவன் முதலிடம் கொடுத்தார்.
சரி நம் விசயத்திற்கு வருவோம்.
உடலின் சக்தியை விட மனதிற்கு சக்தி அதிகம்.
உங்கள் மனதில் இமய மலையையே சிவனின் வடிவமாக நினைத்து, கோடிக்கணக்கான ஜீவராசிகளில், நீங்களும் ஒருவர் என்ற உண்மையை உணர்ந்து, உங்களுக்கு முன் கோடிக்கணக்கான பக்தர்கள், உங்களுக்கு பின் கோடிக்கணக்கான பக்தர்கள், அவர்கள் எல்லோருக்கும் நடுவில் நீங்கள் இமயமலையை கிரிவலம் வருவதாக மனக்கண்ணில் நினைத்து பாருங்கள்,
நீங்கள் பௌர்ணமி அன்று இமயமலையை கிரிவலம் வந்து கொண்டு இருப்பீர்கள்.
உங்கள் மனதிற்கு சக்தி அதிகம் என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களால் எல்லா நல்ல செயல்களையும் செய்து விட முடியும்.